Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொலைமிரட்டல்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பகிரங்க புகாரால் பரபரப்பு

அக்டோபர் 19, 2020 09:55

விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என்று சாத்தூர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பகிரங்க புகார் தெரிவித்திருக்கிறார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே அமைச்சர் மீது கொலைமிரட்டல் புகார் கூறியிருப்பது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. சாத்தூரில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜவர்மன் எம்.எல்.ஏ. தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது கொலைமிரட்டல் புகார் கூறினார். கடந்த 6 மாதமாக தன்னை வெட்டிப்புடுவேன். குத்திப்புடுவேன். என அமைச்சர் பேசி வருவதாகவும், கட்சியினர் மத்தியில் தன்னை தரக்குறைவாக நடத்துவதாகவும் ராஜவர்மன் தெரிவித்தார். 

விருதுநகர் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவி விவகாரத்தில் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தாம் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை எனப் பேசிய ராஜவர்மன், ஒரு அமைச்சர் இப்படி கொலைமிரட்டல் விடுக்கும் அளவுக்கு நடந்துகொள்ளலாமா? என கட்சியினரிடம் நியாயம் கேட்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தான் இந்த ராஜவர்மன். கடந்த 2019ம் ஆண்டு இடைத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் ராஜவர்மனை போட்டியிட வைத்ததே ராஜேந்திரபாலாஜி தான். அவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவரும் ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை உடையவர்கள். இருவரும் மஞ்சள் சட்டை அணிந்து கொள்வதுடன் கையில் வண்ண வண்ண நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வே குற்றம்சாட்டியிருப்பதால் முதல்வரும், துணை முதல்வரும் பதில் சொல்ல வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்